திங்கள், 13 ஜூலை, 2009

பிரிந்து போகும் உரிமை ஓர் (தமிழ்) இனத்திற்க்கு உள்ளதா?

சோவியத் யூனியனைக் (ருசியா)கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சனைக் பற்றி தான் எழுதியுள்ள "தேசிய இனப்பிரச்சனை குறித்து" என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை ஓர் இனத்திற்கு உள்ளதா என்பது கீழ்க்காணும் காரணங்களால் தீர்மானிக்கப்படும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார்.

1) ஒரு சிறுபான்மை இனம், பேரினவாதத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்க்ப்பட்டிருக்கவேண்டும்.

2) பிரிவினை கோரும் இனமக்கள் தொடர்ச்சியான நிலப்பரப்பில் இருக்கவேண்டும்.

3) மொழி மட்டுமே ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஜாதி, மதம் போன்றவற்றால் ஓர் இனத்தின் அடையாளப்படுத்த முடியாது.

ஜோசப் ஸ்டாலின் வரையறுத்துள்ள இந்த மூன்று காரணிகளும் "ஈழ்த்தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவை"

ஏனென்றால், இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்றுவரை சிங்கள பேரினவாதத்தின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஈழத்தமிழர்கள் ஆட்பட்டு வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதாகும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களை வலுக்கட்டாயமாக குடியமர்த்தியதன் மூலம் இலங்கை அரசு அத்துமீறியது. அடக்குமுறையை கையாண்டுள்ளது. (பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் இதைத்தான் செய்தது).

இலங்கை ராணுவம், ராணுவத்தின் துணைப்படைகள், மத்திய காவல்துறை ஆகிய படைப்பிரிவுகளில் மருந்துக்கும்கூட ஒரு தமிழர் இல்லை.(ஹிட்லரின் நாஜிப்படையில் ஒரு யூதன்கூட இல்லை). இந்த அளவிற்கு அவநம்பிக்கையும், பிளவும் உறுதியாகக் கெட்டிப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் எவ்வாறு கூடிவாழ முடியும்?

தமிழ்ப் பெண்களைத் திட்டமிட்டு, கூட்டுப் பாலியல் அத்துமீறல்களுக்கு உட்படுத்துவது சிங்கள ராணுவத்திற்கு அன்றாட கடமையாக வலியுறுத்த்ப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள்கூட சிங்கள ராணுவத்தினரின் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளார்கள் என்ற செய்தி இடியாய் இறங்குகிறது. "உங்கள் வயிற்றில் புலி அல்ல, சிங்கள சிங்கம்தான் வளரவேண்டும்" என்று சொல்லி சொல்லி தமிழ் பெண்களை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை ஒழுக்கமில்லாத, கோழைத்தனமான சிங்கள ராணுவம் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது.(கொடுங்கோலன் ஹிட்லர் படைகள்கூட இந்த ஈனச் செயலில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை).

தமிழர்களின் அடையாளங்களையும், பண்பாட்டு சின்னங்களையும் சிதைப்பதை சிங்கள பேரினவாதம் திட்டமிட்டு நடத்தி வருகிறது.(யாழ்பாணத்தில் இருந்த மிகப்பெரிய நூலகத்தை எரித்து சாம்பலாக்கியது மற்றும் பாடசாலைகள் எரிக்கப்பட்டது). இதனால் ஒரு தலைமுறை தமிழ்க் குழந்தைகள் எழுத்தறிவற்றவர்களாக ஆக்கப்பட்டது.

இலங்கையில் தமிழினத்தை முற்றிலுமாகத் துடைத்தெறியும் நோக்கத்தை ராச்பக்சே-வின் பாசிச இனவெறி அரசு தடையேதுமில்லாமல் அரங்கேற்றி வருகிறது. விடுதலைப் புலிகளை அழித்த பின்பு மீதமுள்ள தமிழர்களைப் பாதுகாப்பு முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் நிரந்தரமாய் அடைத்து வைக்க வெட்டவெளி மைதானங்களை தற்போது தாயர் நிலையில் வைத்துள்ளது ராசபக்சே-வின் கொலைவெறி பிடித்த சிங்கள அரசும், ஒழுக்கமில்லாத சிங்கள ராணுவமும்.

உலக சரித்திரத்தில் எந்த இனமும் இந்த அளவு ஆதரவற்ற, பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டதில்லை.

எத்தனை எத்தனை கொலைகள், கற்பழிப்புகள், சித்ரவதைகள், ஓலங்கள் மற்றும் அலங்கோலங்களைக் கொண்டது ஈழ மண். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என்று ஒருவரையாவது விட்டதுண்டா?.

கடந்த மே மாதம் வரை நடைப்பெற்ற போரில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களான கொத்து குண்டு, விசவாயு குண்டு மற்றும் ரசாயனகுண்டு போன்றவற்றைகொண்டு தமிழினத்தை அழித்தபோது மவுனமே சம்மதம் என்று உலகநாடுகள் அமைதி காத்தன. இறுதி நாளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புல்டவுசர் மூலம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர்.

அறுநூறு கோயில் மற்றும் தேவாலயங்கள் இடித்து தள்ளப்பட்டு கலாச்சார படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. முல்லைத்தீவு முல்லைதூவ என்று சிங்கள பெயராக மாற்றப்பட்டிருக்கிறது.

இப்போது இறுதியாக நிவாரண முகாம் என்ற பெயரில் ஜெர்மனியில் இருந்ததைப்போன்று வதை நிவா"ரண" முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. சரியான தண்ணீர் கிடையாது. குளிப்பதற்கு பாதுகாப்பான இடம் கிடையாது. பாலின வாரியாக மக்கள் குடும்பம் குடும்பமாக பிரிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களும், யுவதிகளும் விசாரணை என்ற பெயரில் அழைத்துசெல்லப்பட்டு கொல்லப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகின்றனர். ஒருவேளை உணவுகூட கொடுக்காமல் திறந்தவெளி சிறைச்சாலையாக வைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக நடந்துமுடிந்த போரில் தமிழினம் அனுபவித்த வலிகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. சர்வதேசம் முழுவதினாலும் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட நிலையில், சிங்கள கொலைவெறி அரசினாலும் பல வல்லாதிக்க வல்லரசுகளின் சுயநலத் தேவைகளுக்கான அவற்றின் கூட்டுதவியினாலும் ஈழத்தமிழினம் அழித்து சின்னாபின்னமாக்கப்பட்டது. யாருமற்ற நிலையில் அநாதரவாய் அந்தரித்து நின்றது ஈழம்.முப்பது வருட காலமாய் தனியே நின்று போராடிய தமிழர்படையை வெல்ல முடியாமல் திணறிய சிங்களம் இப்போது பல வல்லரசுகளின் பூரண ஆதரவோடு ஒரு இன அழிப்பு யுத்தத்தை நடத்தி முடித்துவிட்டு புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டோம் என எக்காளமிடுகிறது.சர்வதேசங்களின் ஆசீர்வாதத்தோடு சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு மற்றும் இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈழத் தமிழினம் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல. வீடிழந்து, நிலமிழந்து, சேர்த்துவைத்த செல்வங்கள் அனைத்தையும் இழந்து உயிரைத்தன்னும் காப்பாற்றிக் கொள்ளலாமென எண்ணி ஏதிலிகளாய் அகதிகளாய் உணவின்றி, நீரின்றி அலைந்துதிரிந்து… கடைசியில் உயிரையும் உறவுகளையும் பறிகொடுத்து கைகால்களை இழந்து ஊனமாகி இன்னும் கொலைக்கூடாரங்களுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் பேரவலத்துடன் இன்றும் தமிழினம்.

மனிதன் மிருகங்களோடுகூட வாழ்ந்துவிடலாம். இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ள நிலையில் சிங்கள் அரக்கர்களோடு எப்படி ஒன்றாக வாழமுடியும்?...

இவ்வளவு தூரத்திற்கு வந்த பின்பு, தனி ஈழம்தான் தீர்வு என்று அரசியல் தலைவர்களும், மக்களும் கூறிவருகின்றனர். (இலங்கைத் தமிழர்கள் பல தேர்தல்களிலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இக்க்ருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே இலங்கையில் இருந்து பிரிந்து போகும் உரிமை தமிழர்களுக்கு நூறு விழுக்காடு உண்டு. அரசியல் தீர்வு என்பது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்காது. தனி நாடு ஒன்றே தமிழர்களுக்கு முழுமையான சுதந்திரத்தையும், அமைதியையும் பெற்று தரும்.

முத்தமிழ்வேந்தன்
சென்னை

கருத்துகள் இல்லை: